அகமதாபாத் நகரின் சபர்மதி பகுதியில் வசிக்கும் 34 வயது இளம்பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மீது அளித்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த இவருக்கும், ஹரியானாவைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 55 லட்சம் ரூபாய் செலவில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போதே 50 லட்சம் ரூபாய் கூடுதல் வரதட்சணை கேட்டு மாமனார் வீட்டார் தகராறு செய்துள்ளனர்.
திருமணம் முடிந்து ஹனிமூனுக்காக வியட்நாம் சென்றபோதுதான், தனது கணவர் ஒரு ‘எசெக்ஸ்யுவல்’ (Asexual – பாலின ஈர்ப்பு இல்லாதவர்) என்ற உண்மை அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்தது. தனது தம்பிக்குத் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக, குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் உண்மையை மறைத்துத் திருமணம் செய்துகொண்டதாக விஜய் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த உண்மை தெரிந்த பிறகு, மனைவியுடன் வாழப் பிடிக்காமல் அவரை அடித்துத் துன்புறுத்தியதுடன், கணவரின் சிகிச்சைக்கு என மீண்டும் 20 லட்சம் ரூபாய் கேட்டு அந்தப் பெண்ணைச் சித்திரவதை செய்துள்ளனர். தற்போது அந்தப் பெண் புகுந்த வீட்டை விட்டு வெளியேறி, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இது குறித்து சபர்மதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.