கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
கு. அஜ்மல்கான் April 10, 2026 02:14 PM

கருணாநிதி மறைவு- நடந்தது என்ன.?

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்ட போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த போது அவருக்கு மெரினா கடற்கரையில் சமாதி அமைக்க அப்போது ஆட்சியில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கொடுக்கவில்லையென தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் அவரது அப்பாவிற்கு நினைவு மண்டபம் கட்டினார்., கட்டவேண்டியது தான். அவர் முன்னாள் முதலமைச்சர் சரி தான், நாங்கள் அதற்கு ஆட்சேபனை செய்யவில்லை. 

மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.?

பிறகு அதற்கு இடம் கொடுப்பது பற்றி ஏற்கனவே நான் பேசிவிட்டேன். மீண்டும் பேசத் தேவையில்லை என்று கருதுகிறேன். அதை மக்கள் தெரிந்து கொள்ளுங்கள். பெருந்தலைவர் காமராஜ் மறைந்தார். அப்போது தமிழகத்தில் இருந்த அனைத்து தலைவர்களும் கட்சி வேறுபாடு பார்க்காமல், சேர்ந்து போய் கருணாநிதியை பார்த்து. அவர் முதலமைச்சராக இருந்தார், அவருக்கு அடக்கம் செய்ய மெரினாவில் இடம் வேண்டும் என்று கேட்டார்கள். அப்போது கருணாநிதி, இறக்கும்போது முதலமைச்சராக இருந்தால் தான் மெரினாவில் இடம், அவர் இப்போது முதலமைச்சர் இல்லை., முன்னாள் முதலமைச்சர். எனவே கிண்டியில் இடம் தருகிறோம் என்று சொன்னார்.

ஜானகி அம்மா இறந்தபோது, கழக நிர்வாகிகள் கருணாநிதியை சந்தித்து எங்களுடைய முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி, அவரும் முதலமைச்சராக இருந்து, இப்போது இறந்துவிட்டார். அவருக்கு எம்ஜிஆர் அடக்கம் செய்த இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி வேண்டும் என்று கேட்டோம். அப்போது கருணாநிதி அமைச்சரவையைக் கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறார், முதலமைச்சராக இருந்து உயிர் துறந்தால் தான் மெரினா கடற்கரையில் இடம். மற்றவர்களுக்கு இடம் இல்லை.

காமராஜ், ஜானகிக்கு இடம் கொடுக்கவில்லை

ஜானகி அம்மையாருக்கு ராமாவரம் தோட்டத்தில் நிலம் இருக்கிறது. அங்கு அடக்கம் செய்யுங்கள், காவல்துறை மரியாதை செலுத்தும் என்று தீர்மானம் போட்டார். பிறகு காமராஜ் மறைந்தார். அது மட்டுமல்ல அம்மா முதலமைச்சராக இருந்து இறந்து விட்டார்கள். அப்போது நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தேன். புரட்சித் தலைவர் அடக்கம் செய்த இடத்தில், அது அப்போது எனது கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அங்கு ஒரு இடத்தை தேர்வு செய்து நல்லடக்கம் செய்தோம். உடனே அதற்கு வழக்கு போட்டு விட்டார்கள்.

கருணாநிதி மறைந்த பிறகு ஸ்டாலின் என்னை சந்தித்து கேட்டார். ஏற்கனவே அம்மா அடக்கம் செய்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அதனால் அனுமதி கொடுக்கமாட்டோம். என்றோம். உடனே அந்த வழக்கை போட்டவர்கள் எல்லாம் வாபஸ் பெற்றுவிட்டார்கள் என்றார்கள். அப்படி என்றால் யார் தூண்டுதல்..? இவர் தானே தூண்டுதல். அப்போது நான், ஸ்டாலின் அவர்களே உங்க அப்பா என்ன முடிவு எடுத்தாரே அதே முடிவை நான் எடுக்கிறேன். இறந்த போது கருணாநிதியும் முன்னாள் முதல்வர்தான். காமராஜருக்கும், ஜானகி அம்மையாருக்கும் என்ன சொன்னரோ, அதையே உங்கள் தலைவருக்கும் செய்வோம் என்று சொன்னேன். 

கீழ்த்தரமான எண்ணம் அதிமுகவிற்கு இல்லை

உடனே நீதிமன்றத்திற்குப் போனார்கள். அதேநேரம் கிண்டியில் 2 ஏக்கர் நிலம் கொடுத்தோம். 200 கோடி மதிப்புள்ளது. அங்கு அடக்கம் செய்யாமல் எதற்கு நீதிமன்றம் போனார்கள்..? தீர்ப்பு வாங்கினார். உண்மையிலே கொடுக்ககூடாது என்று நினைத்திருந்தால், நாங்கள் மேல்முறையீடு செய்து தடுத்திருப்போம். அந்த கீழ்த்தரமான எண்ணம் அதிமுககாரனுக்கு இல்லையென தெரிவித்தார்.உங்களை மாதிரி, அம்மாவை அந்த இடத்தில் அடக்கம் செய்தது தவறு என்று பல பேரை தூண்டிவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் கட்சி அதிமுக கட்சி அல்ல. நாம் செய்தது நியாயம் தானே...? என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.