தமிழக அரசியலில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். கொரோனா பெருந்தொற்று காலத்தில், உயிரைப் பணையம் வைத்து மக்களை நேரில் சந்தித்த ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும்தான் என்று கூறியுள்ள அவர், எடப்பாடி பழனிசாமிக்கு அந்த அளவிற்குத் தைரியம் இல்லை என்று சாடியுள்ளார். ஆனால், அந்த இக்கட்டான நிலைமையைத் தான் திறமையாகக் கையாண்டது போல இ.பி.எஸ் தற்பெருமை பேசிக் கொள்வதாக ஓ.பி.எஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த உலகில் அடிப்படை அரசியல் கண்ணியம் கூட இல்லாமல் யாராவது வாழ்கிறார்கள் என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான் என்றும், அவரது செயல்பாடுகளால் வரும் காலங்களில் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அதிமுக (இ.பி.எஸ் அணி) தோல்வியையே சந்திக்கும் என்றும் அவர் சாபமிட்டுள்ளார். ஓ.பி.எஸ்ஸின் இந்த நேரடித் தாக்குதல் அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.