நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவான கடைசி படம் 'ஜன நாயகன்'. பொங்கலை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால் படம் இன்னும் வெளியாவில்லை. இதே நேரத்தில் விஜய்யின் அரசியல் வருகைக்கு பின்னர் அவர் பல்லவேறு விமர்சங்களையும் தடங்களையும் எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இன்னும் 'ஜன நாயகன்' திரைக்கு வராத நிலையில், இணையத்தில் முழு திரைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது; ''நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் கே வி என் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் சிக்கல்களால் இன்றுவரை தணிக்கை சான்றிதழ் பெற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட அந்த படம் பல்வேறு காரணங்களால் இன்றுவரை திரையிட முடியாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் படத்தின் வெளிநாட்டு உரிமை, ஏரியா விற்பனை, ஓடிடி உரிமை பெற்ற பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு பிறகாவது இப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி முதலீடு செய்த அனைவருக்கும் போட்ட பணத்தை எடுத்து தரும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்று ஜனநாயகன் படத்தில் இருந்து ஐந்து நிமிடம் ஓடக்கூடிய சண்டைக்காட்சி மட்டும் இணையத்தில் லீக் ஆனதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும் என்று எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இன்று மொத்த படமும் தரமான ( HD QUALITY) பிரிண்டாக இணையதளங்களில் வெளியாகி இருப்பதாகவும் அதை பல்லாயிரக்கணக்கானோர் டவுன்லோட் செய்து பார்த்துக் கொண்டிருப்பதாகவும் வரும் தகவல்கள் பேரிடியாக இருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் ஒரு திரைப்படத்தை முன்னணி நடிகர்களை வைத்து தயாரிப்பதும் ரிலீஸ் செய்வதும் அதில் முதலீடு செய்த பல நூறு கோடிகளை திருப்பி எடுப்பதும் சாதாரண விஷயம் அல்ல என்பது திரைப்படத்துறை சார்ந்த அனைவருக்கும் தெரியும். இது விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரசிகர்களை பொறுத்தவரை எந்த வடிவத்திலும் தேடித்தேடி பார்ப்பது அவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனால் அது முதலீடு செய்து தயாரிப்பாளருக்கு பெரும் திண்டாட்டமாக இருக்கும் என்பது யாருக்கும் புரிவதில்லை.
இந்த படத்தை பல மொழிகளில் ( PAN INDIA MOVIE ) வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இப்போது திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டிருப்பதால் ஒட்டு மொத்த திரைப்படத்துறைக்கும் பேரிழப்பு. சினிமாவுக்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும் பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள். சுனாமி கொரோனா போல பைரஸியும் திரைப்படத்துறைக்கு ஒரு பேரிடர் என்றால் மிகையாகாது.
எனவே காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து இணையதளம் உள்ளிட்ட எந்த சோசியல் மீடியாவிலும் இந்த படத்தை யாரும் பகிர்ந்து விடாதபடி தடுக்க வேண்டும் என்றும், இந்தப் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றும் தமிழ் திரைப்படத்துறை சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.