
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகின் மிக முக்கியமான கடல் வணிக பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தி' மிக விரைவில் திறக்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு ஈரான் அதிகாரிகளை சந்திக்க உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் வெற்றி எதில் இருக்கிறது என்ற கேள்விக்கு, "ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதுதான் 99 சதவீத முக்கிய அம்சம்" என்று டிரம்ப் பதிலளித்துள்ளார்.
பிப்ரவரி இறுதியில் தொடங்கிய இந்த மோதலால், உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதோடு, பொருளாதார நிலையின்மையும் ஏற்பட்டுள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வார கால போர்நிறுத்தத்தை பயன்படுத்தி, ஒரு நிரந்தர அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. இருப்பினும், ஈரான் தனது பிடிவாதத்தை காட்டினால் ராணுவ நடவடிக்கை மூலம் ஜலசந்தி திறக்கப்படும் என்பதை டிரம்ப் தனது பேச்சின் மூலம் சூசகமாக உணர்த்தியுள்ளார்.
Edited by Siva