'திமுக தோற்றால் கனிமொழி தனி கட்சி ஆரம்பிப்பார்!' - அண்ணாமலை ஆரூடம்
Vikatan April 11, 2026 04:48 PM

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, ரத்தினபுரி பகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, “2026 தேர்தலில் திமுக தோற்றால் கனிமொழி தனி கட்சி ஆரம்பித்து விடுவார். ஸ்டாலின் ஒரு பக்கம் வந்து விடுவார். திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது. செந்தில் பாலாஜியின் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லவில்லை. மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, செந்தில் பாலாஜி ஆகியோர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

கரூரில் 4 தொகுதியிலும் வெற்றி பெறுவோம். கோவையில் தோல்வி பயம் காரணமாக செந்தில் பாலாஜி உளறி வருகின்றனர். சிறையில் இருந்த காரணத்தினால் பயத்தில் பேசி வருகின்றனர். அரசியலில் சகிப்புத்தன்மை வேண்டும். மக்கள் அனைத்தும் பார்க்கிறார்கள்.

அண்ணன் திருமாவளவன் எப்போதும் பொறுமையாக இருக்கக்கூடியவர், அவரும் தவறு செய்கிறார். வானதி அக்கா மிக அருமையாக இருக்கிறார். வெயில் காரணமாக கடுமையாக சோர்ந்து விட்டார். 2 நாட்கள் ஓய்வில் இருப்பார். பிரச்சாரம் செய்வதற்கு நாங்கள் இருக்கிறோம். ஜனநாயகன் படம் வெளியே வந்தது பெரிய தவறு. தேர்தலுக்கு பிறகு ஒரு ரசிகனாக திரையரங்கில் போய் நான் பார்ப்பேன். இந்த விவகாரத்தில் எல். முருகனைத் தொடர்புபடுத்தி பேசுவது வன்மத்தின் உச்சம். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

அண்ணாமலை `` `அறிவாலயத்தின் அடி செங்கல் வரை உருவுவேன்' என்றார்; போய் வேலையை...’ - செந்தில் பாலாஜி

திமுக பைல்ஸ் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளேன். அவர்கள் பாஜக அலுவலகத்திற்கு வந்து விசாரணை செய்துவிட்டு சென்றுள்ளார்கள். அமைச்சர் காந்தி வேட்டி சேலை வழங்கியதில் செய்த 160 கோடி ஊழலை ஆதாரத்துடன் வழங்கி உள்ளேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறினால் இவர்கள் புழல் சிறைக்கு செல்வார்கள். " என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.