விஜய்க்கு கடும் தொண்டை வலி.. கன்னியாகுமரியில் நாளை நடைபெறவிருந்த தவெக பொதுக்கூட்டம் திடீர் ரத்து; ரோடு ஷோ நடத்த திட்டம்..?
Seithipunal Tamil April 12, 2026 05:48 AM

தமிழக தேர்தலுக்கும் இன்னும் 11 நாட்கள் மாத்திரமே உள்ளன. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழக முதன்முறையாக களமிறங்கியுள்ளது.

அக் கட்சியின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 06 தொகுதி தவெக வேட்பாளர்களை ஆதரித்து அவர் நடத்தவிருந்த பொதுக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நாளை கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த கட்சி நிர்வாகிகள் அனுமதி கோரியிருந்தனர். அதன்படி, மதியம் 02 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி கேட்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சில கட்டுப்பாடுகளுடன் மதியம் 02 மணி முதல் இரவு 08 மணி வரை (6 மணி நேரம்) அனுமதி வழங்கியிருந்தார்.

இந்நிலையில் அவரது பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. கல்லூரி மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பந்தல் தளவாடங்களை கழற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரோடு ஷோவுக்கு மகாதானபுரம் ரவுண்டானா அல்லது சீரோ பாயிண்ட் பகுதியை தவெக நிர்வாகிகள் தேர்வு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர் பிரசாரம் காரணமாக விஜய்க்கு கடும் தொண்டை வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் பேசுவதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக காரைக்குடி கூட்டத்தை போலவே இங்கும் அவர் பேசுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்த சூழலில், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே மாநில நிர்வாகி செங்கோட்டையன் இன்று மாலை கன்னியாகுமரி வரவிருந்த நிலையில், அவரது பயணமும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அனுமதி வழங்கியிருந்த நிலையிலும், தலைவரின் உடல்நிலை மற்றும் நிர்வாகக் காரணங்களால் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நாளை அல்லது மாற்று தேதியில் ரோடு ஷோ பிரசாரம் நடைபெறுமா? என்பது குறித்து கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.