பாலிவூட்டில் இருந்து வந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி (47), தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் சந்தித்த நிதி நெருக்கடி மற்றும் உளவியல் ரீதியான அழுத்தங்கள் குறித்து சமூக வலைதளங்களில் மனம் திறந்துள்ளார்.
அதாவது, கடந்த 2005-ஆம் ஆண்டில் அவர் சந்தித்த ‘ஷாப்பிங்’ மோகம் குறித்து மனம்திறந்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் இது குறித்து கூறியதாவது;
'எனக்கு 24 வயது இருக்கும் போது, மற்ற நடிகைகள் விமான நிலையத்திற்கு வரும்போது விலை உயர்ந்த பைகளை வைத்திருப்பதை பார்த்து நானும் வாங்கினேன்.
சுமார் 1.70 லட்சம் ரூபாய் மதிப்பிலான லூயிஸ் உய்ட்டன் பையை எதற்காக வாங்கினேன் என்றே தெரியவில்லை. மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்பதற்காகவே 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேனல் ஜாக்கெட் மற்றும் 04 லட்சம் ரூபாய் மதிப்பிலான டயார் கவுச்சோ பைகளை வாங்கினேன். பிரபலமான இடத்திற்கு வந்துவிட்டேன் என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவே இவற்றை செய்தேன். அப்போது இருந்த அழுத்தத்தால் என்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு இத்தகைய பொருட்களை வாங்கினேன்.
அன்றைக்கு அந்த பைகளை வாங்குவதற்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், இன்று எனக்கு பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும். எனவே, தேவையற்ற ஆடம்பர பொருட்களில் பணத்தை வீணாக்காமல் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் என்று எனது மகளுக்கும், ரசிகர்களுக்கும் தற்போது அறிவுறுத்துகிறேன்' என்று சமீரா ரெட்டி அறிவுரை கூறியுள்ளார்.