தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தலை முன்னிட்டு தற்போது தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பரமக்குடியில் ராமநாதபுரம் வேட்பாளர்களை ஆதரித்து அவர் தற்போது பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான உழைப்பை போட்டு தமிழ்நாட்டை மீட்டெடுத்துள்ளோம். தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாகக் கொண்டு வந்துள்ளோம். தமிழ்நாட்டை அடுத்ததாக உலக அளவில் நம்பர் ஒன் பிராண்டாக வளர்த்தெடுக்க போகிறோம்.
என்னை செய்திகளில் பார்க்காத நாளே இருக்க முடியாது. ஆய்வுக்கூட்டம், கள ஆய்வு, அரசு நலத்திட்ட விழாக்கள் எனத் தொடர்ந்து இயங்கிக் கொண்டே தான் இருந்தேன். சாக்கடைக்கு சரிசமமாக எடப்பாடி பழனிச்சாமியின் வார்த்தைகள் வந்து விழுகிறது. அவருடைய மோசமான வார்த்தைகளுக்கு பாடம் புகட்டக்கூடிய நாள் தான் ஏப்ரல் 23. மறைந்த தலைவர்களை இழிவு படுத்துவது, அடுத்தவர் மரணத்தை எதிர்பார்ப்பது, பெண்களை கண்ணியம் இல்லாமல் பேசுவது என தொடர்ந்து வாய்க்கொழுப்பு எடுத்து பேசி வருகிறார் என்று முதல்வர் கூறினார்.
அதாவது முன்னதாக கொரோனாவில் முதல்வரே போய் சேர்ந்திருப்பார் என்றும், கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்திருந்தனர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி சர்ச்சையாக பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை குறிப்பிட்டு தான் முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்துள்ளார்