சினிமா உலகத்தைப் பொருத்தவரைக்கும் எந்தக் காலகட்டத்திலும் பெருந்தன்மையான நடிகர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு உதாரணம் தான் இந்த சம்பவம்.
சுசி கணேசன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் விக்ரம் நடித்த படம் கந்தசாமி. இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா நடித்து இருந்தார். அந்தப் படத்துக்காக அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் ரூ.20 லட்சம். அந்தத் தொகையைப் படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பாகவே தாணு அவருக்குக் கொடுத்து விட்டார். படப்பிடிப்பு முடிந்ததும் தாணு பிரம்மாண்டமாக விளம்பரம் செய்தார். அவர் விளம்பரம் செய்த பாணியைப் பார்த்து வியந்த கிருஷ்ணா தனது நெருங்கிய நண்பரை அழைத்தார்.
‘இந்தப் படத்துக்கு நான் 20 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கேன். அவர் விளம்பரம் செய்றதைப் பார்க்கும்போது பிரமிப்பா இருக்கு. இவ்ளோ விளம்பரம் செய்றதுக்கு அவருக்கு காசு வேணாமா? அதனால நான் என்னோட சம்பளத்தை அவ்ளோ வாங்கிக்க விரும்பல. கொஞ்சம் குறைச்சிக்க விரும்புறேன். எனக்கு 10 லட்ச ரூபாய் சம்பளம் இருந்தா போதும். அதனால வாங்கின சம்பளத்துல இருந்து 10 லட்ச ரூபாயைத் திருப்பிக் கொடுக்குறேன்.
இதைத் தாணுவிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள்” என்று சொல்லி அந்த நண்பர்கிட்ட 10 லட்ச ரூபாயைக் கொடுத்து இருக்கிறார் கிருஷ்ணா. எப்படிப்பட்ட பெருந்தன்மைன்னு பாருங்க. நடிகர் கிருஷ்ணாவுடன் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது. அவரு மாதிரி ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏன்னா திரைப்படத்தோட வெற்றி தோல்வியை அவரு மாதிரி நிதர்சனமாக யாரும் பேச முடியாது.
அவர் காயப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவருடைய நண்பர்கள் எல்லாம் அவருடைய படங்களை சுமாராக ஓடுவதாகச் சொன்னால் கூட அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார் கிருஷ்ணா. எங்கே படம் ஓடுது? ஏன் சும்மா சொல்றீங்கன்னு அவர் முகத்துக்கு நேராக சொல்லக்கூடியவர்தான் கிருஷ்ணா. அது மாதிரி ஒரு மனிதரைப் பார்ப்பது என்பது மிகவும் அரிது என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.