பேச்சுவார்த்தையில் தோல்வி; போர் மூலம் அடைய முடியாத அனைத்தையும் அமெரிக்கா கேட்கிறது; ஈரான் குற்றச்சாட்டு..!
Seithipunal Tamil April 13, 2026 04:48 AM

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் சூழல் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வந்தது. தற்போது இரண்டு வார இடைக்கால போர்நிறுத்தம் அமலாகியுள்ளது. அதன்படி, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 11 நடைபெற்றது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இது குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கூறுகையில், அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று ஈரான் முடிவு செய்துள்ளதாகவும், அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என்ற நிபந்தனைக்கும், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முயற்சிக்காது என்ற நிபந்தனைக்கும் ஈரான் ஒப்புக்கொள்ள மறுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மறுபுறம், கடந்த ஆறு வாரங்களாக நடந்து வரும் போரின் மூலம் பெற முடியாததை அமெரிக்கா கேட்கிறது என்று ஈரான் கூறியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து ஈரானின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், ''பேச்சுவார்த்தைதான் நமது தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நிரந்தர வழிமுறையாகும், ஆனால் 3 பிரச்சினைகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிந்து போனது.

பேச்சுவார்த்தைகளில் சில அம்சங்கள் தொடர்பாக நாங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளோம், பேச்சுவார்த்தைகளில் ஈரானின் 10 அம்சங்கள் மற்றும் அமெரிக்கத் தரப்பின் கருத்துக்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். ஒரே சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாட்டிற்கு வருவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும்வரை ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள சூழ்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பேச்சு வார்த்தைக் குறித்து கானாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது x தளத்தில் இஸ்லாமாபாத்திற்கு வந்த அமெரிக்கக் குழுவினர், “போர் மூலம் அடைய முடியாத அனைத்தையும் எங்களிடம் கேட்கிறார்கள்.'' என்று பதிவிட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.