தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் மகன்களுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள ஒரு தனியார் சாலை கட்டுமான டெண்டர் நிறுவனத்தை இலக்கு வைத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அமைச்சரின் குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் துணையாக மத்தியப் பாதுகாப்புப் படையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மயிலாப்பூர் பகுதியில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் வெளிநபர்கள் யாரும் நுழையாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு புகார் மற்றும் தேர்தலுக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் ரொக்கப் பணம் தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புகார்கள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.