ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. முன்னதாக இப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி பின் சுந்தர் சி படத்தில் இருந்து விலகினார். இதனை அடுத்து சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. தற்போது தலைவர் 173 படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களேயுள்ளது. அடுத்தபடியாக கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினியின் தலைவர் 173 திரைப்படம் உருவாக இருந்தது. இப்படத்தை சுந்தர் சி இயக்கவிருப்பதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகுவதாக அவரே அறிவித்தார்.
தலைவர் 173 படத்தை இயக்க பல்வேறு இளம் இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்குவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் சிறப்பு அறிவிப்பு டீசர் ஒன்றும் வெளியாகி ரசிகர்களிடையே கவனமீர்த்தது.
இன்னும் ஒரு சில வாரங்களில் தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலின்படி தலைவர் 173 படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப்போவதில்லை என்றும் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. சிபி சக்கரவர்த்தி ரஜினியிடம் கதை சொல்லி ஓக்கே செய்திருந்தாலும் அவரது திரைக்கதையில் ரஜினிக்கு முழு திருப்தி ஏற்படாததாக கூறப்படுகிறது. துரந்தர் மாதிரி இந்த படத்தின் கதையை மாற்ற ரஜினி கேட்டதாகவும் ஆனால் சிபி சக்கரவர்த்தி மறுத்துவிட்டதால் இந்த படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இயக்குநர் மாற்றத்திற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. சிபி சக்கரவர்த்தி முன்னதாக தெலுங்கில் நானி நடிக்கவிருந்த படத்தை இயக்க முன்பணம் வாங்கிவிட்டதாகவும். தற்போது அந்த தெலுங்கு படத்தின் தயாரிப்பாளர் தலைவர் 173 படத்தின் இணை தயாரிப்பாளராக விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஆனால் ராஜ்கமல் இந்த விருப்பத்தை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது .
டிராகன் படத்தின் மூலம் கவனமீர்த்த அஸ்வத் மாரிமுத்து முன்னதாக ரஜினியை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. ரஜினிக்கு அஸ்வத் மாரிமுத்து சொன்ன கதை பிடித்திருந்தாலும் இந்த கதையை எழுதுவதற்கு போதுமான கால அவகாசம் இல்லாததால் அவர் சிம்பு படத்திற்கான பணிகளை துவங்கினார். தற்போது சிபி சக்கரவர்த்தி தலைவர் 173 படத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அஸ்வத் மாரிமுத்துவை மீண்டும் அனுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன