மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே காதலனுடன் சேர்ந்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துதாகேடி கிராமத்தைச் சேர்ந்த தன்ராஜ் நாத் என்பவரது மனைவி தபுபாய், அதே ஊரைச் சேர்ந்த பங்கஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.
இது கணவருக்குத் தெரியவந்ததால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி தனது காதலனுடன் சேர்ந்து கணவரை இரும்புக் கம்பி மற்றும் வாளால் தாக்கி படுகொலை செய்துள்ளார்.
பின்னர், ஆதாரங்களை மறைக்க உடலைத் துண்டு துண்டாக வெட்டி எரிக்க முயன்றதுடன், ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வயலில் குழி தோண்டி புதைத்துள்ளனர். தன் கணவரைத் தேடுவது போல நாடகமாடிய தபுபாய், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், தந்தையின் மரணத்தில் தாயின் மீது சந்தேகம் இருப்பதாக பிள்ளைகள் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்ததில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. காதலன் பங்கஜை பிடித்து விசாரித்தபோது, அவர் கொலையை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து போலீசார் வயலைத் தோண்டி உடலை மீட்டதுடன், கொலையாளிகளான மனைவி தபுபாய் மற்றும் அவரது காதலன் பங்கஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொடூர சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.