தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்த ஒரே வாரத்தில், அங்கிருந்த "நச்சுத்தன்மை" கொண்ட பணிச்சூழல் காரணமாக விலகிய ஊழியர் ஒருவருக்கு சம்பளம் மறுக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஆண்டுக்கு ரூ. 5.04 லட்சம் ஊதியத்தில் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் ஆக இணைந்த அந்த ஊழியர், அங்கு நிலவிய தீவிரமான கண்காணிப்பு மற்றும் மைக்ரோ மேனேஜ்மென்ட் குறித்து 'Reddit' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தலைக்கு மேல் கேமராக்கள், ஒன்பது மணி நேர கெடுபிடி என சிறை போன்ற சூழல் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒற்றை தலைவலி காரணமாக 10 நிமிடம் முன்னதாக சென்றதற்காக மேலாளர் திட்டியதுடன், வேலையை "நரகமாக்கி விடுவேன்" என மிரட்டியதால் அவர் விலகியுள்ளார்.
ஆனால், ஒரு வார கால உழைப்பிற்கு சம்பளம் கேட்டபோது, "நோட்டீஸ் காலம்" போன்ற விதிகளையும், அவர்கள் காத்திருந்த நேரத்தையும் சுட்டிக்காட்டி நிறுவனம் பணம் தர மறுத்துள்ளது. "ஊழியர்களை பணியமர்த்துவது அவர்களை விலைக்கு வாங்குவதற்கு சமமல்ல" என அந்த ஊழியர் பதிலடி கொடுத்துள்ளார்.
நிறுவனத்தின் இந்த செயல் சட்டவிரோதமானது என பல பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சுரண்டல்களை தடுக்க ஒப்பந்த நகல்களை சரியாக சரிபார்ப்பதும், முறைகேடான மிரட்டல்களை ஆவணப்படுத்துவதும் அவசியம்.
Edited by Siva