தவெக தலைவர் விஜய் தலைநகரில் 3 இடங்களில் தேர்தல் பிரச்சாரம்!
Dinamaalai April 15, 2026 01:48 PM

தமிழகத்தில் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சென்னையில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளான தி.நகர், எழும்பூர் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் இன்று மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை அவர் பொதுமக்களைச் சந்தித்துப் பேசுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை சென்னை மாநகரக் காவல்துறை தற்போது வழங்கியுள்ளது.

இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் நடிகர் விஜய் வீதி உலா வருவதற்கு காவல்துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது. போக்குவரத்துக் நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருதி பல்வேறு கடுமையான நிபந்தனைகளையும் காவல்துறை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளுக்கு இடையே தனது ஆதரவாளர்களைச் சந்திக்க விஜய் வருவதால் அவரது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏற்கனவே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய பகுதிகளில் விஜய் தனது பிரச்சாரத்தை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில் இன்று மீண்டும் சென்னையில் களம் காண்கிறார். 3 மணி நேரப் பயணத் திட்டத்தில் முக்கிய இடங்களில் மட்டும் அவர் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் வருகையை முன்னிட்டு அந்தந்தப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நகர் முழுவதும் பரபரப்பாகக் காணப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.