“8000 ரூபாய் கூப்பன் கொடுத்தால் கடும் நடவடிக்கை!” - திமுகவினருக்குத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை - வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
Dinamaalai April 15, 2026 09:48 PM

தமிழகம் முழுவதும் திமுகவினர் வாக்காளர்களுக்கு ரூ. 8000 மதிப்பிலான பரிசு கூப்பன்களை வழங்கி வருவதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி இன்று அதிரடி விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுகவினர் வழங்கி வரும் இந்த கூப்பன்கள் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் கூறுகையில், மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்காகப் பெறப்பட்ட அனுமதியைச் சான்றாகக் காட்டி, அதனை அச்சிடப்பட்ட கூப்பன்களாக விநியோகிப்பது முற்றிலும் சட்டவிரோதமானது. இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1951) பிரிவு 127A-ன் படி, அச்சிடப்படும் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கைப்பிரதிகளில் முறையான விபரங்கள் இருக்க வேண்டும். தற்போது விநியோகிக்கப்படும் கூப்பன்கள் மாதிரி நடத்தை விதிமுறைகளை மீறுவதாக உள்ளது.

இத்தகைய கூப்பன்கள் மூலம் விநியோகிக்கப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் வாக்காளர்களைத் தவறாக வழிநடத்தக்கூடியவை என ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி எந்தவிதமான பரிசு கூப்பன்களையோ அல்லது துண்டுப் பிரசுரங்களையோ விநியோகம் செய்யக்கூடாது. இந்தத் தடையை மீறி கூப்பன்களை வழங்கும் நபர்கள் மற்றும் அதற்குப் பின்னால் இருப்பவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே, மண்ணச்சநல்லூர் தொகுதியில் இந்தக் கூப்பன் விவகாரத்தால் ஒரு இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திமுகவின் இந்த 'கூப்பன் கலாச்சாரத்தை' கடுமையாக விமர்சித்திருந்தனர். "ஏமாற்றி ஓட்டு வாங்கும் முயற்சி" என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு திமுகவினருக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.