234 தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனம், நிறுவனத்தில் பணிபுரியும் வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும், வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அதன் 18 உறுப்பு மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளுக்கு வாக்குப்பதிவு அடுத்த நாளான ஏப்ரல் 24 ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழகம், தேர்தல் நாள், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களை தொடர் விடுமுறையாக உறுதிப்படுத்த வேண்டும் என கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, விடுதியில் தங்கியிருக்கும் மாணவ, மாணவியர் எவ்வித சிரமமின்றி தங்கள் தொலைதூரத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு சென்று வாக்கு செலுத்தவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஏப்ரல் 24-ஆம் தேதி விடுமுறையை மாற்று நாளில் வேலை நாட்களாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.