இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1084 ரன்கள் எடுத்துள்ளார். 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 2477 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை பற்றி செய்திகள் வெளியாகி வருகின்றன. என்றாலும், அவர் கடுமையான உடல்நலப் பிரச்னைகளுடனேயே தொடர்ந்து போராடி வருகிறார். இன்னும் முழுமையாக அவர் குணமடையவில்லை. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அவருக்கு நிதி மற்றும் மனரீதியான ஆதரவை வழங்குவதற்காக நெருங்கிய நண்பர்களால் உருவாக்கப்பட்ட ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைந்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளியின் பள்ளிக்கால நண்பர் ஆவார்.
காம்ப்ளியின் நீண்டகால நண்பரான மார்கஸ் கூட்டோ தலைமையிலான இந்த முயற்சி, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் நலம் விரும்பிகளையும் ஒன்றிணைத்துள்ளது.
இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 'காம்ப்ளியின் ஞாபகசக்தி தற்போது நன்றாக இல்லை. அவருக்கு அதிகம் நினைவில் எதுவும் இருப்பதில்லை. காம்ப்ளியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்,
அத்துடன், அவரது நடமாட்டத்தில் படிப்படியான முன்னேற்றம் காணப்பட்டாலும், ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர் என்றும், அடுத்தகட்டமாக அவருக்கு மூளை பக்கவாதம் ஏற்படக்கூடும் என்று மருத்துவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் குடிப்பதை நிறுத்திவிட்டார், ஆனால் சில சமயங்களில் அவர் மயங்கி விழும்போது, அவ்வழியே செல்பவர்களிடம் புகைப்பிடிக்க உதவுமாறு கேட்பார். அவர்களும் காம்ப்ளிக்கு உதவுவதாக நினைத்து மகிழ்ச்சியுடன் கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தாங்கள் என்ன தீங்கை விளைவிக்கிறோம் என்பதை அவர்கள் உணர்வதில்லை எட்ன்றும், இதனால் வரும் பாதிப்பு அவருடைய இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரகத்திற்கு ஏற்படவில்லை என்றாலும், அவருடைய மூளைக்கு ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு உதவும் வண்ணம், அவரது நண்பர்களை உள்ளடக்கி நான் ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளேன். அவர்களது பெயர்களைக் குறிப்பிடவில்லை. எனினும் அவர்கள் நிதிரீதியாக அதிகம் பங்களிக்கிறார்கள் என்று மார்கஸ் கூட்டோ குறிப்பிட்டுள்ளார்.