''பிரதமர் மோடியை விட பெரிய பெண்ணியவாதி இருக்க முடியாது''; மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவாதத்தில் கங்கனா புகழாரம்..!
Seithipunal Tamil April 17, 2026 08:48 AM

தொகுதி மறுவரையறை மசோதா 2026-ஐ நநேற்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகம் செய்தார். யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026-ஐ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகம் செய்தார்.

இதைத் தொடர்ந்து மக்களவையில் நடந்த விவாதத்தின்போது, நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத், மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து தெரிவித்து பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியை விட பெரிய பெண்ணியவாதி வேறொருவர் இருக்க முடியாது என்று பாராட்டியுள்ளார்.

அத்துடன், இன்று, பாரதத்தின் மகள்கள் பிரதமர் மோடியை விடப் பெரிய பெண்ணியவாதி யாரும் இல்லை என்று நம்புகிறார்கள். பெண்ணியத்தின் ஒரே அடையாளமாக அவரே திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டியதோடு, இந்த நாட்டின் மகள்கள் அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பார்கள். இந்தியப் பெண்கள் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கைக்கு நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம் என்று பேசியுள்ளார்.

மேலும், இந்த  மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை, தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்த கங்கனா, இது ஒரு "அரசியலமைப்பு ரீதியான அவசியம்" என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தொகுதி மறுவரையறை செயல்முறை மிகவும் முக்கியமானது மற்றும் தேவையானது என்றும் அவர் கூறினார்.

அத்துடன், அரசியல் என்பது சமூக மாற்றத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்திலிருந்தே பெண் சிசுக்கொலைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததோடு, இது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதையும் சுட்டிக்காட்டி பேசினார்.

இந்த  மகளிர் இடஒதுக்கீடு மசோதா அவசரகதியில் கொண்டு வரப்படுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள கங்கனா, "இந்தியப் பெண்களுக்கு நீதி வழங்குவதற்காகவே பிரதமர் மோடி அவசரம் காட்டுகிறார். பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.