234 தொகுதிகள் உள்ள தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு இழுபறிக்கு மத்தியில், 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்.டி.ஏ. கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பாஜகவின் பல்வேறு மாநிலத் தலைவர்களும், பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி நேற்று பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனாலும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய தேசிய கட்சியான காங்கிரஸின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஏனைய முக்கிய தலைவர்கள் இன்னும் தேர்தல் பரப்புரைக்கு வரவில்லை. இதன் காரணமாக அந்தக் கூட்டணியில் சலசலப்பு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார். அன்றைய தினம் பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டவுள்ளார்.
அத்துடன், மீண்டும் அவர் வரும் திங்கட்கிழமை தமிழ்நாடு வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருநாட்கள் பயணமாக நாளை மறுநாள் தமிழ்நாடு வரும் காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே, நாளை மறுநாள் திருநெல்வேலியிலும், திங்கள் அன்று கன்னியாகுமரியிலும் பரப்புரை செய்யவுள்ளார்.