வெயில், டிராபிக், பரபரப்பு என எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சென்னை மாநகரம், தற்போது ஒரு கனவு தேசத்தைப் போல பிங்க் நிறத்தில் ஜொலித்து வருவது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் ராம் என்பவர், சென்னை மதுரவாயல் மேம்பாலத்திற்கு அருகே டிரோன் மூலம் எடுத்த வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
அதில், சாலைகளின் இருபுறமும் பிங்க் நிறப் பூக்கள் அடர்த்தியாகப் பூத்து குலுங்க, அதற்கிடையே வாகனங்கள் செல்லும் காட்சி ஜப்பானின் புகழ்பெற்ற ‘செர்ரி பிளாசம்’ திருவிழாவை நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
A post shared by Venkatesh Ram (@venkateshram_)
பொதுவாக ‘பிங்க் ட்ரம்பட்’ எனப்படும் இந்த வகை மரங்கள், குளிர்காலத்தின் இறுதியிலும் கோடையின் தொடக்கத்திலும் இலைகளை உதிர்த்துவிட்டு இதுபோல மலர்கின்றன. சென்னையில் மதுரவாயல் மட்டுமல்லாது ஓ.எம்.ஆர் மற்றும் அண்ணா நகரின் சில பகுதிகளிலும் இந்த வசந்த கால மாற்றம் சென்னையை ஒரு சர்வதேச சுற்றுலாத் தலம் போல மாற்றியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பல சென்னைவாசிகள், “தினமும் இதே ரோட்டில் தான் போகிறோம், ஆனால் இவ்வளவு அழகை கவனிக்கவே இல்லையே” என ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த அழகு இன்னும் சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என்பதால், சென்னை மக்கள் குடும்பம் குடும்பமாக அந்த இடங்களுக்குச் சென்று செல்பி எடுத்துத் தள்ளி வருகின்றனர்.