விழுப்புரம்: விழுப்புரம் அருகே வணிகவரித்துறை மற்றும் வனத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்.
விழுப்புரம் அருகே வணிகவரித்துறை மற்றும் வனத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், லாரியில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் இருந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக விழுப்புரம் நோக்கி கனரக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வணிகவரித்துறை அதிகாரிகள் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த அந்த லாரியை மறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது லாரியின் உட்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து விழுப்புரம் வனத்துறை அதிகாரிகளுக்கு வணிகவரித்துறையினர் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், லாரியைப் பறிமுதல் செய்து விழுப்புரம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 2 டன் எடையுள்ள 129 செம்மரக் கட்டைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 80 லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுநரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவை பகுதியைச் சேர்ந்த குமார் (44) என்பது தெரியவந்தது. மேல்மருவத்தூரில் இருந்து இந்த செம்மரக் கட்டைகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு கடத்திச் செல்ல முயன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், குமாரை கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓட்டுநருக்குத் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மரக் கட்டைகள் எங்கிருந்து வெட்டி கடத்தி வரப்பட்டன? இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார்? என்பது குறித்து வனத்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி சோதனையில் இவ்வளவு பெரிய அளவிலான செம்மரக் கட்டைகள் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.