திருச்சி கிழக்கில் இன்று வீதி வீதியாக வாக்கு சேகரிக்க வருகிறார் விஜய்.. போலீஸார் விதித்த 27 நிபந்தனைகள்..
TV9 Tamil News April 19, 2026 11:48 AM

Tamilnadu Polls 2026: திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள 27 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.தமிழகத்தில் தேர்தல் பரப்புரைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் உச்சகட்ட அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. அந்தவகையில், நேற்றைய தினம் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ஒரேநாளில் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டனர். தொடர்ந்து, இன்றைய தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா பரப்புரை மேற்கொள்கிறார். அதேபோல், நேற்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பரப்புரை மேற்கொண்டார். இப்படி அடுத்தடுத்து, தேசிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பரப்புரை மேற்கொண்ட வருகின்றனர். இதனிடையே, தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் அடுத்தடுத்து சிக்கல்கள் எழுந்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேலும் படிக்க:தொகுதி மறுவரையறை எதிர்ப்பதன் மூலம் தமிழகத்தின் எம்.பிக்கள் எண்ணிக்கை குறையக்கூடும் – எடப்பாடி பழனிசாமி..

பெரம்பூரை தொடர்ந்து திருச்சியில் பரப்புரை:

அந்தவகையில், சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இதையொட்டி, பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பரப்புரை மேற்கொண்டார். அதன்பின்பு, நேற்று முன்தினம் (ஏப்.17) வீடு, வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திருச்சியிலும் வேட்புமனு தாக்கல் செய்த அன்று பரப்புரை மேற்கொண்டார். அதன்பின், இன்றைய தினம் தான் அவர் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

திறந்த வாகனத்தில் நின்றபடி பரப்புரை:

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று மதியம் 2 மணியளவில் விஜய் திருச்சிக்கு வருகிறார். பின்னர் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு தனக்கு வாக்கு சேகரிக்க இருக்கிறார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் அருகே உள்ள வயர்லஸ் சாலையில் தனது பிரச்சாரத்தை தொடங்கும் அவர் தென்றல்நகர், கே.கே.நகர் பஸ்நிலையம், காஜாமலை சாலை, இ.வி.ஆர்.கல்லூரி சாலை, தமிழ்நாடு ஓட்டல், கோழிப்பண்ணை சாலை, கொட்டப்பட்டு பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடியே வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மீண்டும் இரவு 7 மணி அளவில் விமான நிலையம் வந்தடைகிறார்.

இதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் 10 பொதுவான நிபந்தனைகளுடன் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் வழங்கும் நிபந்தனைகளை பின்பற்றுமாறும் கூறி அனுமதி அளித்துள்ளார்.

போலீசார் விதித்த 27 நிபந்தனைகள்:

அதில், பிரச்சாரத்தின்போது போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையில் வழிநெடுகிலும் கட்சி கொடிகள் அமைக்கக்கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறாமல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்தில் சுவரொட்டியோ, கட்சி கொடிகளோ, விளம்பர பதாகையோ அனுமதியின்றி வைக்கக்கூடாது. ஆபத்து விளைவிக்கும் வெடிபொருட்களை வைக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிர்ணயிக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே நிகழ்ச்சி நடத்த வேண்டும். என்பன உள்பட 27 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, நேற்றைய தினம் தனது பரப்புரைக்கு திமுக அரசு முட்டுக்கட்டைப் போடுவதாக விஜய் கடும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்:

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம்.

தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்,…

— TVK Vijay (@TVKVijayHQ)

இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை. திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு.

மேலும் படிக்க: டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..

தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது என்று அதில் தெரிவித்திருந்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.