ஒரு படம் வெளியானால் இயக்குநர்களை தான் பலரும் பாராட்டுவார்கள். அந்த படத்தில் மற்ற இடங்களில் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுவார்கள். ஆனால், சமீப காலமாக தமிழ் சினிமா தொடர்ந்து டல் அடித்து வரக் காரணமே இயக்குநர்கள் தான் என்கின்றனர்.
கடந்த வாரம் விக்னேஷ் சிவன் 100 கோடி பட்ஜெட்டில் எடுத்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் இதுவரை இந்தியாவில் வெறும் 35 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. உலகளவில் 50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சனிக்கிழமையான நேற்றும் படத்துக்கு பெரிதாக கூட்டம் வரவில்லை. இந்நிலையில், இந்த வாரம் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கெளதம் ராம் கார்த்திக் நடித்த மிஸ்டர் எக்ஸ் படமும் மண்ணைக் கவ்வி விட்டதாக கூறுகின்றனர்.
பிரதீப் ரங்கநாதனுக்காக இந்த வசூல்: விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களிலேயே லவ் இன்சூரன்ஸ் கம்பெனி அதிக வசூல் ஈட்டும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதற்கு காரணம் பிரதீப் ரங்கநாதன் தான். லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து 100 கோடி வசூல் ஈட்டியதாக போஸ்டர் அடித்து வெளியிட்டனர். இந்த படம் 50 கோடியை கடக்கவே படாதபாடு பட்டுவிட்டது. நல்லவேளை 210 கோடி பட்ஜெட்டில் திட்டமிட்டதை போலவே இதே மொக்கை கதையை விக்னேஷ் சிவன் படமாக்கியிருந்தார் என்றால் இன்னமும் ஒரு 100 கோடி இழப்பு தயாரிப்பாளருக்கு ஏற்பட்டு இருக்கும் என்கின்றனர்.
மிஸ்டர் எக்ஸ் வசூல்: ஆர்யா, கெளதம் கார்த்திக்கு எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நல்லா ஹேண்ட்ஸம் ஆகவும் சிக்ஸ் பேக் வைத்து வாட்ட சாட்டமாகவும் இருக்கின்றனர். ஆனால், இயக்குநர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து தவறு செய்து வருகின்றனர். எஃப்ஐஆர் படமே அதிகபட்சமாக 24 கோடி வசூல் ஈட்டிய நிலையில், பெரிய பட்ஜெட்டில் அவர் இயக்கத்தில் உருவான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் 2 நாட்களில் அதிகபட்சமாக 1.36 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமா இந்த ஏப்ரல் மாதத்தில் ரொம்பவே டல் அடித்து வருகிறது. தனுஷின் கர திரைப்படமாவது கை கொடுக்குமா? அல்லது இட்லி கடை போல கவிழ்த்து விடுமா என தியேட்டர் ஓனர்கள் முதல் திரையுலகமே அச்சத்தில் உள்ளது.