உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தின் போது வன்முறையை தூண்டியதாகக் கருதப்படும் முக்கிய குற்றவாளியான ஆதித்ய ஆனந்தை உ.பி. சிறப்புப் பணிப்படை அதிரடியாகக் கைது செய்துள்ளது. ஒரு வார காலமாகத் தலைமறைவாக இருந்த இவரை, தமிழகத்தின் திருச்சி ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் பிடித்தனர்.
'பிகுல் மஸ்தூர் தஸ்தா' என்ற அமைப்பை சேர்ந்த ஆதித்ய ஆனந்த் மீது ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. மின்னணு கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உளவுத்துறை மூலம் இவரது இருப்பிடத்தை போலீசார் கண்டறிந்தனர். நொய்டா ஃபேஸ்-2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த வன்முறைக்கு இவர் முக்கிய மூளையாக செயல்பட்டது விசாரணையில் உறுதியானது.
முன்னதாக இவரது கூட்டாளியான ரூபேஷ் ராய் கைது செய்யப்பட்டதையடுத்து, போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க ஆதித்ய ஆனந்த் தனது தலைமுடி மற்றும் தாடியை வெட்டி அடையாளத்தை மாற்றிக்கொண்டு தமிழகத்திற்கு தப்பி வந்துள்ளார்.
இவர்கள் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தொழிலாளர்களை தூண்டிவிட்டு, அமைதியான போராட்டங்களை வன்முறையாக மாற்றியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும் மானேசர் பகுதியில் நடந்த வன்முறைகளில் இவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edited by Siva