குட் நியூஸ்... இனி 5 நாட்களில் வீடு தேடி வரும் சிலிண்டர்... காத்திருக்கும் நேரம் குறைப்பு!
Dinamaalai April 19, 2026 01:48 PM

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் நிலவி வந்த காலதாமதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பெட்ரோலியத் துறை ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி சிலிண்டர் முன்பதிவு செய்த வெறும் 5 நாட்களுக்குள்ளேயே உங்கள் வீட்டின் கதவைத் தட்டும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இதற்கு முன்பு சிலிண்டர் புக் செய்த பிறகு 10 முதல் 15 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் போதிய அளவில் எரிவாயு கையிருப்பு உள்ளதால், விநியோக நடைமுறைகளை விரைவுபடுத்த பெட்ரோலியத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோரின் நீண்ட காலக் காத்திருப்பு நேரம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவையான சமையல் எரிவாயுவை தட்டுப்பாடின்றி, அதுவும் குறுகிய காலத்தில் விநியோகம் செய்ய எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே, குறிப்பாக இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. "புக் செய்த சில நாட்களிலேயே சிலிண்டர் கிடைப்பது பெரிய நிம்மதி" எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து எரிவாயு ஏஜென்சிகளும் இந்த 5 நாள் விநியோக முறையைத் துரிதமாகச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இனி சிலிண்டர் தீர்ந்துவிடுமோ என்ற கவலை தேவையில்லை!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.