தமிழகத் தேர்தல் களத்தில் பொன்னேரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைக் கடுமையாகச் சாடியுள்ளார். பழைய அதிமுக என்பது இப்போது உயிருடன் இல்லை என்றும், தற்போது இருக்கும் அதிமுக வெறும் ‘முகமூடி’ தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த முகமூடிக்கு பின்னால் இருப்பது பாஜக தான் என்றும், மோடி மற்றும் அமித் ஷாவின் முழுக் கட்டுப்பாட்டில் அதிமுக இயங்கி வருவதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் இருந்து கொண்டு தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்றும், அதற்கு அதிமுக ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். அதிமுக தலைவர்கள் ஊழல் புகார்களால் பாஜகவிடம் தங்களை அடகு வைத்துவிட்டதாகச் சாடிய அவர், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியால் மட்டுமே முடியும் என்று முழங்கினார். ராகுல் காந்தியின் இந்த ‘ஆக்ரோஷமான’ பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.