சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். இந்தத் தேர்தல் கருணாநிதி குடும்பத்திற்கு ஒரு ‘மூடுவிழா’ நடத்தும் தேர்தலாக அமையும் என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். ஒரே ஒரு குடும்பம் மட்டும் பிழைப்பு நடத்துவதற்காக, தமிழகத்தின் எட்டு கோடி மக்களையும் இந்த அரசு வாட்டி வதைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற கொடூரமான குற்றங்கள் அதிகரித்து வருவதாக வருத்தம் தெரிவித்தார். இத்தகைய அவலங்களைச் சரிசெய்து, மக்கள் நிம்மதியாக வாழ மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று அவர் தனது உரையில் வலியுறுத்திக் கூறினார்.