விமானம் மூலம் ஆமைகள் உள்ளிட்ட உயிரினங்கள் கடத்துவது தொடர்பான பல செய்திகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கென்யாவிலிருந்து சீனாவுக்கு எறும்புகளை கடத்திய ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த மார்ச் 10ஆம் தேதி கென்யாவின் நைரோபியின் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குயின் கார்டன் என அழைக்கப்படும் ராணி எறும்புகளை கடத்திய ஜான் என்கிற நபர் பிடிபட்டார்.எறும்புகளை கடத்திய ஜானுக்கு 8000 அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்பட்டதோடு ஒரு வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது..
கென்யாவை சேர்ந்த ஒருவரிடமிருந்து ஒவ்வொரு எறும்பையும் 78 அமெரிக்க டாலருக்கு சம்பந்தப்பட்ட நபர் வாங்கியது தெரிய வந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து வனவிலங்குகளை கடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துவக்கத்தில் தனது குற்றத்தை மறுத்த ஜான் ஒரு கட்டத்தில் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஒரு வருடம் சிறையில் அடைக்கப்படும் ஜான் அதன்பின் அவரின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
கடத்தப்பட்ட அந்த ராணி எறும்புகளுக்கான தேவை ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளிடம் அதிகம் இருப்பதாக ஜான் கூறியிருக்கிறார். அந்த ஒவ்வொரு எறும்பின் மதிப்பும் இந்திய மதிப்பில் ரூ.21,000 என கென்ய அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். கடந்த மே மாதம் கென்யாவிலிருந்து உயிருள்ள ராணி எறும்புகளை பெல்ஜியம் மற்றும் கென்யா நாட்டை சேர்ந்த 4 பேர் கடத்தி போலீசாரிடம் சிக்கி அவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.