நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவர் மீதான சமீபத்திய விமர்சனங்களுக்கு ஆதரவாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் களமிறங்கியுள்ள நிலையில், அதனை வன்மையாகக் கண்டித்து இயக்குநர் சேரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்ன்ணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அவர் கட்சி துவங்கிய நாள் முதலே பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். இந்த நெருக்கடியான சூழலில், விஜய்க்கு ஆதரவாக அவரது தந்தையும், மூத்த இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று முன்னணியூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதுமட்டுமின்றி, தனது மகனுக்கு முழுமையான ஆதரவை வழங்கி, மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் மகனுக்கு ஆதரவாக எஸ்.ஏ.சி பேசியிருந்த இந்த வீடியோ மற்றும் பேட்டியை சுட்டிக்காட்டி, பிரபல இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். விஜய்க்கு போதிய அரசியல் முதிர்ச்சி இல்லை என்றும், வெறும் கூட்டத்தைக் காட்டி அரசியல் செய்ய நினைக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சேரன் தனது பதிவில்,
சமூக அக்கறையுள்ள இயக்குநர்: சட்டம் ஒரு இருட்டறை , நீதிக்கு தண்டனை , நான் சிகப்பு மனிதன் போன்ற சிறந்த அரசியல் விழிப்புணர்வுப் படங்களை மக்களுக்குத் தந்த ஐயா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள், இப்போது தனது பிள்ளையைக் காப்பாற்ற களத்தில் திடீரென பேட்டிகள் அளிப்பது வருத்தமளிக்கிறது. பெரும் அரசியல் பார்வையுள்ள எஸ்.ஏ.சி-க்கு, தனது மகனின் அரசியலில் தெளிவும், உழைப்பும், தொலைநோக்குச் சிந்தனையும் இல்லை என்பது நன்றாகத் தெரியும். அப்படித் தெரிந்தும் அவரை அரசியலில் உயர்த்த நினைப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதற்குச் சமமாகும்.
அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு முறையான அரசியல் புரிதலை உள்வாங்கிக் கற்றுக் கொடுக்காமல், அவர்களை வெறும் கூட்டம் காண்பிப்பதற்காகப் பயன்படுத்தி பலனடைய நினைப்பது சரியா? என்பதை எஸ்.ஏ.சி போன்ற முதிர்ச்சியானவர்கள் யோசிக்காமல் செயல்படுகிறார்கள். முதலில் விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் அரசியலைக் கற்றுக் கொடுங்கள்; அவர்களைத் தயார் செய்யுங்கள். அதன் பின்னர், எல்லோருக்கும் நாம் தேவையா என்பதை அவரே முடிவு செய்யட்டும்.
இந்த சமூகத்துக்கு எந்தத் தீங்கும் விளைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இதைப் பதிவு செய்கிறேன். இவர்கள் அடுத்த தலைமுறையை மிகவும் ஆபத்தான இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். எஸ்.ஏ.சி ஐயாவுக்கு அவர் பிள்ளை முக்கியம் என்றால், நமக்கு நம் பிள்ளைகள் முக்கியம். மக்களே சிந்தித்துப் பாருங்கள்.
இவ்வாறு இயக்குநர் சேரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.