நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு; மேற்குவங்கத்தில் ராகுலின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை..?
Seithipunal Tamil April 23, 2026 03:48 AM

மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவிருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதோடு, 29-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெவுள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு, சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அங்கு தனித்துப் போட்டியிடுகிறது. இதற்காக அக்கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் மைதானத்தில் அப்போதைய முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுடன் இணைந்து பிரசாரம் செய்தார்.

இந்நிலையில், தற்போதைய இரண்டாம் கட்ட தேர்தலுக்காக கொல்கத்தா மற்றும் ராம்பூர் ஆகிய இடங்களில் நாளை (ஏப்ரல் 23) ராகுல் காந்தி பிரசாரம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக பார்க் சர்க்கஸ் மைதானம் அல்லது மெட்டியாப்ரூஸ் பகுதியில் கூட்டங்களை நடத்த காங்கிரஸ் நிர்வாகிகள் காவல்துறையினரிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், ராகுல் காந்தியின் இந்தப் பிரசாரக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், ராகுலின் பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சுவங்கர் சர்க்கார் கூறியதாவது;

கடந்த 08-ஆம் தேதி இதே மைதானத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்ற அனுமதி வழங்கிய நிலையில், ராகுல் காந்திக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், கொல்கத்தா மாநகராட்சி நிர்வாகம் அந்த மைதானத்தில் அரசியல் கூட்டங்களுக்குத் தடை விதித்துள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் சுவிதா செயலியில் மெட்டியாப்ரூஸ் பகுதி ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பின்னர் ராகுலை மீண்டும் பிரசாரத்திற்கு அழைத்து வர காங்கிரஸ் நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றதாக கூறப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.