வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என பல பரிமாணங்களில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் தற்போது வெளியாகும் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், அவரின் மகள் திவ்யா சத்யராஜ் அளித்துள்ள பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சத்யராஜ் அவர்களின் மனைவி மகேஷ்வரி சத்யராஜ். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகன் சிபிராஜ் தமிழ் திரைப்படங்களில் நடிகராக செயல்பட்டு வருகிறார். அவர் பல படங்களில் ஹீரோவாக நடித்ததுடன், தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தையும் உருவாக்கியுள்ளார்.
மகள் திவ்யா, திரைப்படத் துறையில் அதிகமாக ஈடுபடாமல், சமூக சேவைகள் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமூக நலத்திட்டங்களில் அவர் ஆற்றும் பணி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. அதை தாண்டி கடந்த சில மாதங்களாக திமுகவுக்கு ஆதரவாகவும் தவெகவுக்கு எதிராகவும் மட்டும் பேசி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த திவ்யா சத்யராஜ் தன்னைப் பற்றி பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. எனக்காக ஜாதகம் எழுதப்படவில்லை. பொதுவாக பள்ளி விடுமுறையில் குழந்தைகள் உறவினர்கள் வீடுகளுக்கு செல்வார்கள்; ஆனால் என்னைக் கண்டால், பலர் தங்களுடைய குழந்தைகளை என்னுடன் பழக விடமாட்டார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “எனக்கு திருமணத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை. மோதிரம், தாலி போன்றவற்றில் விருப்பம் இல்லை. ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, “நான் தனியாக சந்தோஷமாக இருந்தாலும் சரி, திருமணம் செய்து சந்தோஷமாக இருந்தாலும் சரி, நான் சந்தோஷமாக இருப்பதுதான் என் தந்தைக்கு முக்கியம். என் அப்பா நடித்த படங்களில் கடலோர கவிதைகள் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் வில்லனாக நடிப்பதை விட ரொமான்டிக் ஹீரோவாக நடித்தால் தான் எனக்கு அதிகம் பிடிக்கும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “எனக்கு நடிப்பை விட நியூட்ரிஷன் மற்றும் அரசியலில் அதிக ஆர்வம் உள்ளது. என்னை திருமணம் செய்பவர் சத்யம் சினிமாவில் ஒரு படம் பார்க்க அழைத்து, டீ மற்றும் பன் வாங்கிக் கொடுத்தாலே போதும்; நகைகள் எதுவும் தேவையில்லை,” என்று சிரிப்புடன் பகிர்ந்துள்ளார்.