'திருடன்.. திருடன்'...மூதாட்டியின் அலறல் சத்தம்! மின்னல் வேகத்தில் தப்பிய மர்ம நபர்கள்...! - திருவண்ணாமலையில் பகீர் சம்பவம்!
Seithipunal Tamil May 02, 2026 01:48 AM

திருவண்ணாமலை வேங்கிக்கால் இடுக்கு பிள்ளையார் கோவில் 6-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி புஷ்பா (72), தனது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, வீட்டில் புஷ்பா மட்டும் தனியாக இருந்த சூழலில், திடீரென உள்ளே புகுந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை தாக்கி அச்சுறுத்தியுள்ளனர்.

பின்னர், அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் மதிப்புடைய 3 பட்டை செயின், ¾ பவுன் கம்மல், 3 பவுன் வளையல், ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பழைய செல்போன் ஆகியவற்றை அபகரித்து சென்றனர்.

தாக்குதலில் காயமடைந்த புஷ்பா, “திருடன், திருடன்” என உதவி கோரி அலறியபோதிலும், அக்கம் பக்கத்தினர் வந்து சேரும் முன்னரே அந்த இருவரும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். முகத்தில் காயம் அடைந்த நிலையில், புஷ்பா தனது மகனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுப்பினர்.

அங்கு அவருக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை தாலுகா காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.