சென்னை, மே 2, 2026: 2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு 41% வாக்குகள் கிடைக்கும் என்றும், மொத்தம் 121 இடங்களை கைப்பற்றும் என்றும் ஓய்வு பெற்ற IPS அதிகாரி ரவி கணித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையம் தரப்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு:தமிழக அரசியல் களத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய நான்கு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தன. சில கருத்துக்கணிப்புகள் மட்டுமே தமிழக வெற்றி கழகத்திற்கு சுமார் 30% வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டிருந்தன.
மேலும் படிக்க: வாட்டி வதைக்கும் வெயில்.. வேலூரில் பதிவான 42 டிகிரி செல்சியஸ் வெயில்.. எங்கெல்லாம் மழை இருக்கும்?
இந்நிலையில், 1991ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ரவி, தாம்பரம் காவல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார். அவர் தனது YouTube சேனல் மூலம் வெளியிட்டுள்ள இந்த கருத்துக்கணிப்பில், சுமார் 2.5 லட்சம் வாக்காளர்கள் மற்றும் 2440 ஓய்வு பெற்ற அதிகாரிகள் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு 41% வாக்குகள் கிடைக்கும் – ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி:அவரது கணிப்பின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு 41% வாக்குகள் கிடைத்து, 121 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”.. முகவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மேலும், பல குடும்பங்களில் இளம் தலைமுறை உறுப்பினர்கள் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியதால், அதன்படி வாக்களித்ததாகவும், காலம் காலமாக திமுக மற்றும் அதிமுகக்கு வாக்களித்து வந்தவர்களும் இந்த முறை மாற்றம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 121 இடங்களை கைப்பற்றும் என வெளியிடப்பட்ட இந்த கணிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.