மே 2, 2026: 2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம், திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் அதிமுக ஆகிய நான்கு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏப்ரல் 29ஆம் தேதி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது தீர்மானமாகும்.
இந்த தேர்தல் முந்தைய தேர்தல்களை விட மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அரசியல் களத்தில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி, குழந்தைகள் வரை அரசியலுக்கு ஈர்க்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் மூலம் பிரச்சாரம்:தேர்தல் பிரச்சாரத்தின் போது, “வீட்டில் உள்ள குழந்தைகள் தங்கள் பெற்றோர், தாத்தா-பாட்டி உள்ளிட்டோரிடம் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும்” என விஜய் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், பல வீடுகளில் குழந்தைகள் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியானது. சில பெற்றோர்கள் இதை கவலைக்கிடமாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அரசியலில் குழந்தைகளை பயன்படுத்துவது தவறானது என தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல ஆணையம் எச்சரிக்கை:தற்போது, அந்த ஆணையம் மீண்டும் ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லாவிட்டால், குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுவதோடு தவறான முடிவுகளை எடுக்கக்கூடிய நிலை உருவாகலாம் என தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறவில்லை என்றாலோ அல்லது எதிர்மறையான முடிவுகள் வெளியானாலோ, குழந்தைகள் மனஅழுத்தத்திற்குள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் மனநிலையை கவனமாக கண்காணித்து, அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விஜய்க்கு 41% வாக்குகள்.. 121 இடங்கள்.. கருத்துக்கணிப்பை வெளியிட்ட ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி..
நாளை மறுநாள் நடக்கும் வாக்குப்பதிவு:மேலும், மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
இதற்கிடையில், வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டுள்ளன. சில கணிப்புகள் தமிழக வெற்றி கழகத்திற்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும் என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.