தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் உற்றுநோக்கப்படும் தொகுதிகளில் ஒன்றான சென்னை மாவட்டத்தின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்த 2026 தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான களமாக மாறியுள்ளது.
ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில், இத்தொகுதி 85.98% என்ற மிக அதிகப்படியான வாக்குப்பதிவைப் பதிவு செய்தபோதே, ஒரு 'அரசியல் மாற்றம்' ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா 15,461 வாக்குகள் வித்தியாசத்தில் வலுவான முன்னிலையில் உள்ளார். தி.மு.க வேட்பாளர் கார்த்திக் மோகன் பின்னடைவை சந்தித்துள்ள செய்தி, திமுக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
ஆதவ் அர்ஜுனா தவெக தகர்க்கப்படுகிறதா திமுக கோட்டை?
சென்னை சென்ட்ரல் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம், பாரம்பரியமாக திமுக மற்றும் இடதுசாரிகளின் பலமான கோட்டையாகக் கருதப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில் தி.மு.க 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற இந்தத் தொகுதியில், தற்போது த.வெ.க முன்னிலை பெற்றுள்ளது சாதாரணமான விஷயம் அல்ல.
அண்ணா நகர் எம்.எல்.ஏ எம்.கே.மோகனின் மகன் கார்த்திக் மோகனுக்காக, தி.மு.க-வின் தலைமை குடும்பத்தின் முக்கியப் புள்ளியான சபரீசன் நேரடியாகக் களத்தில் இறங்கிப் பணியாற்றியும், ஆளுங்கட்சியால் தற்போதைக்கு முன்னிலை பெற முடியவில்லை. தி.மு.க இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
த.வெ.க-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தொகுதியில் மேற்கொண்ட பிரச்சார முறைகளும், "மாற்றம்" என்ற முழக்கமும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை இந்த எண்கள் காட்டுகின்றன.
அனுபவம் வாய்ந்த எஸ்.ஆர்.விஜயகுமார் (அ.தி.மு.க) மூன்றாவது இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் ரோஷிணி 4 இடத்திலும் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா தவெக
விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியின் பக்கத்து தொகுதி வில்லிவாக்கம் என்பது ஆதவ்-க்கு பெரும் வலுசேர்ப்பதாக ஆகிவிட்டது. மேலும் ஆதவ், தனது தொகுதியில் தனி கவனம் செலுத்தினார். தொகுதியில் வார்டு வார்டாக வலம் வந்து மக்களை சந்திப்பது உள்ளிட்ட விஷயங்கள் கை கொடுத்தது. மேலும், திமுக தரப்பில், தலைமையின் குடும்பமே களம் இறங்கியது. ஸ்டாலின் மருமகன் சபரீசன் தொகுதியில் முகாமிட்டு பணியாற்றினார். மேலும் முதர்வர் ஸ்டாலினும் இந்த தொகுதியில் தான் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
ஆனாலும் அது அனைத்தையும் தகர்த்து, தற்போது ஆதவ் அங்கு வெற்றி முகத்தில் இருக்கிறார்.
"திராவிடக் கட்சிகளின் கோட்டையைத் தகர்ப்பது புதிய கட்சிகளுக்கு எளிதல்ல" என்ற அரசியல் நோக்கர்களின் கணிப்பை தற்போதைய நிலவரம் சுக்குநூறாக்கியுள்ளது.
TVK: 'திக்.. திக்.. துறைமுகம்' - முந்தும் தவெக; மூன்றாவது இடத்தில் சேகர்பாபு!