கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.
அந்தவகையில் எழும்பூர் (தனி) தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ராஜ்மோகன் வெற்றி பெற்றிருக்கிறார்.
எழும்பூர் தனித்தொகுதியைப் பொறுத்தவரை திமுக சார்பில் தமிழன் பிரசன்னாவும், அதிமுக சார்பில் அபிஷேக் ரங்கசாமியும், தவெக சார்பில் ராஜ்மோகனும், நாதக சார்பில் சரண்யாவும் களமிறங்கி இருந்தனர்.
விஜய் - ராஜ்மோகன்
இதில் தமிழன் பிரசன்னாவுக்கும், ராஜ்மோகனுக்கும் தான் கடுமையானப் போட்டி நிலவியது.
இதில் ராஜ்மோகன் 53,901 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். தவெக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், பிரபல யூடியூபருமான ராஜ்மோகன் எழும்பூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.
திமுக தான் எழும்பூர் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதனால் இந்தத் தொகுதியில் தி.மு.க வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜ்மோகன் வெற்றி பெற்றிருக்கிறார்.
விஜய் - விசில் இரண்டை மட்டுமே நம்பியிருந்த அவர் எழும்பூர் தொகுதியில் வெற்றி வாகையை சூடியிருக்கிறார்.
அமைச்சர் சேகர் பாபுவுக்கும் சிட்டிங் எம்.எல்.ஏவான பரந்தாமனுக்கும் ஆகவே ஆகாது. சேகர் பாபுவின் தலையீட்டால் பரந்தாமனுக்கு சீட் கிடைக்காமல் போனது. இதனால் அவர் தொகுதியில் இறங்கி வேலையே செய்யவில்லை.
மேலும், திமுக சமூக மற்றும் மதவாரியாகக் கணக்குகளை போட்டுக் கொண்டிருந்தது. ஆனால், விஜய் நிறுத்திய ராஜ் மோகனை சாதி மத கணக்குகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் ஆதரித்திருக்கின்றனர்.
இளைஞர்களை கடந்து எல்லா தரப்பு மக்களின் ஆதரவையும் ராஜ் மோகன் பெற்றிருப்பதுதான் அவரின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.