தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தி வரும் சாதனையை, உலக வரலாற்றின் முக்கிய மக்கள் புரட்சிகளுடன் ஒப்பிட்டு சிவகங்கை நாளிதழ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவு, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தோனேசியாவின் ‘ரிஃபார்மசி’, இலங்கையின் ‘அரகலய’ மற்றும் அரபு நாடுகளின் எழுச்சிகளைப் போலவே தமிழகத்தில் மக்கள் ஒரு மாற்றத்தை நிகழ்த்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்டை நாடுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராடிய நிலையில், தமிழக மக்கள் வாக்குச்சீட்டின் மூலம் திராவிடக் கட்சிகளின் ஏகபோக உரிமையை அசைத்துப் பார்த்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸில் ஒரு தரப்பினர் விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர். தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தாலும், தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள சூழலில் கார்த்தி சிதம்பரத்தின் இந்தப் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது. தவெக-வுக்கு மெஜாரிட்டிக்குத் தேவையான 10 இடங்களை ஈடுகட்ட காங்கிரஸ் அக்கட்சிக்கு ஆதரவு அளிக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேபாளத்தின் ‘ஜனா அந்தோலன்’ முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது போல, தமிழகத்தில் அரை நூற்றாண்டு கால இருதுருவ அரசியலுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் தொடக்கமாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கார்த்தி சிதம்பரத்தின் இந்த வெளிப்படையான பாராட்டு, வரும் நாட்களில் தமிழகத்தில் புதிய அரசியல் சமன்பாடுகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.