எனக்கே என்னை ரொம்ப பிடிக்கும்! என் பெர்சனல் தெரியுமா?.. அதற்காக நான் நல்லவ கிடையாது– வனிதா விஜயகுமார் ஓபன் டாக்!
Seithipunal Tamil May 06, 2026 03:48 PM

நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா விஜயகுமார் மீண்டும் தனது வெளிப்படையான பேச்சால் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார். சினிமா, குடும்ப சர்ச்சைகள், தனிப்பட்ட வாழ்க்கை என எப்போதும் பேசுபொருளாக இருந்து வரும் வனிதா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

90களில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான வனிதா, விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். ஆனால் அவரது திருமண வாழ்க்கை நீடிக்காததால், மீண்டும் பொதுவெளியில் அதிகமாக பேசப்பட்டார். அதன் பின்னர் நடந்த தொடர் திருமணங்கள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக வனிதா தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வந்தார்.

தனது குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு காரணமாக நீண்டகாலமாக தனியாக வாழ்ந்து வரும் வனிதா, பலமுறை சமரச முயற்சிகளை எடுத்ததாக கூறப்பட்டாலும், குடும்ப உறவுகள் இன்னும் சீராகவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம், வனிதா புதிய தலைமுறை ரசிகர்களிடமும் பிரபலமானார். தனது நேரடி பேச்சு, சண்டைகள் மற்றும் அதிரடி அணுகுமுறையால் நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த அவர், டைட்டிலை வெல்லவில்லை என்றாலும் தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

அதன்பிறகு பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அவர், ‘Mrs & Mr’ என்ற படத்தை இயக்கியும் நடித்தும் இருந்தார். ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. விமர்சனங்களும் கடுமையாக எழுந்தன. ஓடிடி தளங்கள் வாங்க முன்வராததால், பின்னர் படம் யூடியூபில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் வனிதா பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:“ஒரு பெர்சனாக எனக்கே என்னை ரொம்ப பிடிக்கும். என்னை நெருக்கமாக தெரிந்தவர்கள் கண்டிப்பாக என்னை விரும்புவார்கள். நான் நல்ல நண்பராக இருப்பேன். அம்மா என்பது ஒரு பொறுப்பு. எல்லா குழந்தைகளுக்கும் அம்மாவை பிடிக்கும். எல்லா அம்மாக்களுக்கும் குழந்தைகளை பிடிக்கும். அது இயற்கை. ஆனால் என் பிள்ளைகளுக்கு என்னை பிடிக்கும் என்பதற்காக நான் நல்லவள் என்று அர்த்தமில்லை. அதேபோல், எனக்கு என் பிள்ளைகளை பிடிக்கும் என்பதற்காக அவர்கள் நல்லவர்கள் என்றும் அர்த்தமில்லை” என்று கூறியுள்ளார்.

வனிதாவின் இந்த வெளிப்படையான கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் விவாதமாகி வருகிறது. சிலர் அவரது நேர்மையை பாராட்டி வருகிறார்கள். மற்றொருபுறம், அவர் எப்போதும் போல சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எதுவாக இருந்தாலும், வனிதா விஜயகுமார் தனது பேச்சு மற்றும் அணுகுமுறையால் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.