தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, கடந்த சில நாட்களாக சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு முதலமைச்சருக்கு இணையான (Z-Plus) பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான போலீசார், ஆயுதம் ஏந்திய கமாண்டோக்கள் என நீலாங்கரையே ஒரு கோட்டை போல காட்சியளித்தது. ஆனால், நேற்று இரவு முதல் விஜய்யின் வீட்டிற்கு வழங்கப்பட்டிருந்த இந்த கூடுதல் பாதுகாப்பு மற்றும் கான்வாய் வசதிகள் அதிரடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.
ஆட்சியமைப்பதில் இன்னும் இழுபறி நீடிப்பதாலும், ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்காததாலும் இந்தப் பாதுகாப்பு குறைக்கப்பட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், காவல்துறை தரப்பில் கேட்டபோது, “விஜய்யின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த உயர்மட்ட அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர்; தவெக தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்தப் பாதுகாப்பு குறைக்கப்பட்டது” என விளக்கம் அளித்துள்ளனர். தற்போது விஜய்க்கு மத்திய அரசு வழங்கியுள்ள ‘Y’ பிரிவு பாதுகாப்பு மட்டுமே தொடர்கிறது. பதவியேற்பு விழா தள்ளிப்போன சூழலில், போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் ஏதோ ஒரு பெரிய மாற்றம் நடக்கப்போவதையே காட்டுகிறது.