`அஞ்சும் தவெக; அந்தக் கொள்கை உறுதியும் துணிவும் இருக்கிறதா விஜய்யிடம்?' - ஆளூர் ஷாநவாஸ்
Vikatan May 07, 2026 08:48 PM

108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைப்பதில் `உதவிக் கரம்' தேவைப்படுகிறது விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு. திமுக கூட்டணியில் தொடர்ந்து வந்த காங்கிரஸ், அங்கிருந்து விலகி தவெக-வுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியிடம் 5 இடங்கள் மட்டுமே இருப்பதால், ஆட்சியமைக்க இன்னும் சில கட்சிகளின் ஆதரவை விஜய் நாடியிருக்கிறார்.

அதில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரதானமாக இருக்கின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இது தொடர்பாக தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் 2 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர்.

இத்தகைய சூழலில், ``தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக" என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ``தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுக-விடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்?

ஆளூர் ஷாநவாஸ்

சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?" எனக் காட்டமாகக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.