நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் இப்போது வரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. ஏனெனில், ஆட்சி அமைப்பதற்கு 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு வந்தால் மட்டுமே உங்களை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பேன் என விஜயிடம் ஆளுநர் குறிவிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது..
விஜய்க்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் சொல்ல முடியாது. விஜய் தனது பலத்தை நிரூபிக்க வேண்டியது ஆளுநர் மாளிகையில் இல்லை. சட்டசபையில்தான் என பலரும் கூறி வருகிறார்கள். அதோடு காங்கிரசை தங்கள் கூட்டணியில் விஜய் சேர்த்துக்கொண்ட கோபத்தில்தான் பாஜக இப்படியெல்லாம் செய்கிறது எனவும் பலரும் கூறி வருகிறார்கள்..
இந்நிலையில், விசிக கட்சியை சேர்ந்த ஆலூர் ஷா நவாஸ் தனது எக்ஸ் தளத்தில் ‘தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும் ஆட்சியமைக்க ஆளுநர் இடையூறு செய்கிறார். இதைக் கண்டிக்க தவெக பயப்படுகிறது. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது ஆர்.என்.ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது விஜயிடம் இருக்கிறதா?’’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.