சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சேவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (29), திருமண இணையதளம் வாயிலாக வாழ்க்கைத்துணையைத் தேடி வந்துள்ளார்.

இந்த நிலையில், இளம்பெண் ஒருவர் அவரை தொடர்புகொண்டு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருப்பதாக நெருக்கமாக பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, “எதிர்கால வாழ்க்கையை வளமாக அமைத்துக்கொள்ளலாம்” என நம்பிக்கை வார்த்தைகள் கூறிய அந்த பெண், இணைய வழி முதலீட்டு நிறுவனத்தில் பணம் செலுத்தினால் அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பேச்சை முழுமையாக நம்பிய சத்தியமூர்த்தி, அந்த பெண் தெரிவித்த பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 52 தவணைகளாக மொத்தம் ரூ.45 லட்சம் வரை பணம் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் திடீரென அந்த பெண் தொடர்பை துண்டித்ததுடன், அவரை எந்த வழியிலும் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் மோசடியில் சிக்கியதை உணர்ந்த சத்தியமூர்த்தி, சிவகங்கை இணைய குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், திருமண வாக்குறுதியை பயன்படுத்தி நடைபெற்ற இணைய மோசடி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.