க்யூட் வீடியோ.. விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டுப் பணிப்பெண்... பதிலுக்கு விஜய் செய்த 'அதே' செயல்!
Dinamaalai May 11, 2026 10:48 PM

தமிழக முதலமைச்சர் விஜய், மரியாதை நிமித்தமாகத் தலைவர்களைச் சந்தித்து வரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை அண்ணாநகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு முதல்வர் விஜய் இன்று வருகை தந்தார். வைகோ தனது குடும்பத்தினரையும், கட்சி நிர்வாகிகளையும் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, வைகோவின் வீட்டில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வரும் பணிப்பெண் ஒருவர், முதலமைச்சர் விஜய்யைப் பார்த்ததும் எல்லைக்கடந்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார்.


தங்கள் வீட்டுப் பிள்ளையைப் பார்ப்பது போன்ற உணர்வில், அந்தப் பெண் உடனே முதல்வர் விஜய்க்குத் திருஷ்டி கழித்தார். சற்றும் எதிர்பாராத விதமாக, முதலமைச்சர் விஜய்யும் புன்னகையுடன் அதே பாணியில் அந்தப் பெண்ணிற்குத் திருஷ்டி கழித்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தும், எவ்வித பந்தாவும் இன்றி ஒரு சாதாரணப் பணியாளருக்கு அவர் காட்டிய இந்த அன்பு அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து, அந்தப் பெண் மிகுந்த நெகிழ்ச்சியுடன் முதல்வர் விஜய்யின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

"அண்ணே... நீங்க சிஎம்!" என்ற உற்சாகத்தோடு அந்தப் பெண் நடந்துகொண்ட விதமும், அதற்குப் பிரதிபலனாக விஜய் செய்த செயலும் சமூக வலைதளங்களில் "Real Thalapathy" என்ற ஹேஷ்டேக் உடன் வைரலாகி வருகிறது. அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் விஜய்யின் இந்த எளிமையைப் பாராட்டி வருகின்றனர். இந்தச் சந்திப்பின் போது வைகோ அவர்கள், விஜய்க்கு ஒரு சால்வை அணிவித்து, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.