தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மரியாதை நிமித்தமாக மூத்த அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் உறுப்பினராக பதவியேற்ற பின்னர், ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சர் விஜய்யை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இல்ல வாசலில் நேரில் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். வீட்டிற்குள் நுழைந்த விஜய்யை அன்புடன் கைகோர்த்து வரவேற்ற மு.க.ஸ்டாலின், அருகில் அமர வைத்து உபசரித்தார்.
இரு தலைவர்களும் சுமார் பத்து நிமிடங்கள் பல்வேறு அரசியல் மற்றும் சமூக அம்சங்கள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்க்கு ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற நூலை உதயநிதி ஸ்டாலின் நினைவுப்பரிசாக வழங்கினார்.
திராவிட இயக்கத்தின் வரலாறு, அதன் சிந்தனைகள் மற்றும் முக்கிய தலைவர்களின் கருத்துப்பாதைகள் குறித்து விரிவாக விளக்கும் வகையில் அந்த நூல் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.