டெல்லி கீர்த்தி நகர் பகுதியில் ஒரு செக்யூரிட்டி கார்டை பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்துச் செருப்பால் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
விலங்கு நல ஆர்வலரான ஜஸ்பிரீத் கவுர் என்ற அந்தப் பெண், ஒரு தெரு நாயைத் தடியால் அடித்துக் கொன்றதாகக் கூறி அந்த வாட்ச்மேனை வெளுத்து வாங்கியுள்ளார்.
போலீசார் முன்னிலையிலேயே இந்தச் செருப்படிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து வெளியான மற்றொரு வீடியோவில், அந்த வாட்ச்மேன் தனது தரப்பு நியாயத்தைக் கூறியுள்ளார்.
அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை நாய் கடித்ததாகவும், அதன் காரணமாகவே தான் நாயை அடித்ததாகவும், ஆனால் அது இறந்துவிடும் என்று நினைக்கவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
“நாயைக் கொன்றது பாவம்” என ஒரு தரப்பினரும், “சட்டத்தைக் கையில் எடுத்து வாட்ச்மேனை அடித்தது தவறு” என மற்றொரு தரப்பினரும் இணையத்தில் மல்லுக்கட்டி வருகின்றனர்.
நாய் கொல்லப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், வாட்ச்மேனைத் தாக்கிய பெண் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.