சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்… அதிமுக எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு!
TV9 Tamil News May 14, 2026 12:48 AM

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான குழு ஆதரவு அளித்தது தொடர்பாக சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சேர்ந்த வழக்கறிஞர் இன்பதுரை உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி பேச தொடங்கும் போது நாங்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது, பேரவை தலைவர் எந்த பதிலும் தெரிவிக்காமல் பேசலாம் என்று கூறி அனுமதி அளித்தார். அப்போது, பேரவை தலைவரின் இருக்கைக்கு அருகே சென்று எதன் அடிப்படையில் அவரை பேச அனுமதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். சட்ட விதி 9- என்ன சொல்கிறது என்பதை பேரவை தலைவர் படிக்குமாறு கூறினேன். ஆனால், அதனை அவர் ஏற்கவில்லை. சட்ட விதி 9 என்ன கூறுகிறது என்றால், பேரவையில் வாக்களிக்கும் உறுப்பினர் எவரும் நேரடியாகவோ, தனித்தோ ஆதரவு அளிக்கக்கூடிய வகையில் தொடர்புடையது என்ற காரணத்தால் அவரது வாக்கை எடுக்கக் கூடாது.

சபாநாயகரிடம் வலியுறுத்திய அதிமுக எம்எல்ஏக்கள்

இது தேவை என்று பேரவை தலைவர் கருதினால் அவ்வாறு எதிர்ப்புக்கான காரணத்தை பேரவைக்கு கூறுமாறு எந்த உறுப்பினருக்காக வாக்கெடுப்பு எடுக்கப்படுகிறதோ அவரது வாக்கு எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பேரவை தலைவர் முடிவு செய்ய வேண்டும். இதில், பேரவை தலைவர் முடிவே இறுதியானது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது ஆசை வார்த்தைகளை கூறி அதன் மூலம் ஆதாயம் பெறும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க: தவெகவுக்கு ஆதரவு – எஸ்.காமராஜை கட்சியில் இருந்து நீக்கிய டிடிவி தினகரன்

ஒருதலைப்பட்சமாக செயல்படும் சபாநாயகர்

அதை குறிப்பிட்டு பேரவை தலைவரிடம் இந்த கோரிக்கையை நான் வைத்தேன். ஆனால், எந்த பதிலையும் பேரவை தலைவர் தெரிவிக்கவில்லை. இதற்கான நடவடிக்கைகள் கூடிய விரைவில் எடுக்கப்படும். வாக்கெடுப்பு நடைபெறும் போது அதிமுகவின் எதிர்ப்பை தெரிவித்தோம். அதனை பேரவை தலைவர் பதிவு செய்யவில்லை. ஒருவர் ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் போது அவர் எந்தவித ஆதாயமும் அடையக் கூடாது என்பது மிக முக்கியமாகும். ஆதாயம் அடைவதற்காக வாக்களிப்பதாக சுட்டிக்காட்டியும் பேரவை தலைவர் அதனை கவனத்தில் கொள்ளாமல் செயல்பட்டுள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியால் நியமிக்கப்பட்ட கொறடாவின் பேச்சை மீறி வாக்களித்தால் அது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் குற்றமாகும். இது தொடர்பாக கட்சி சார்பில் புகார் அளித்துள்ளோம். இந்த புகாரை சபாநாயகர் இல்லாத காரணத்தால் சட்டப்பேரவை செயலரிடம் அளித்துள்ளோம். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட செயலர் சபாநாயகர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சட்டப்பேரவை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

மேலும் படிக்க: செய்தியை கேட்டு 4 நாட்கள் தூக்கம் இல்ல… சசிகலா பரபரப்பு பேட்டி

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.