தேர்தல் வாக்குறுதியின்படி மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடன் வழங்க வேண்டும்; தவெக அரசுக்கு எம்.யுவராஜா வலியுறுத்தல்..!
Seithipunal Tamil May 14, 2026 01:48 AM

மாணவர்களின் நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, இளங்கலை முதல் பிஎச்.டி. வரை ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடனுக்கான அரசு உத்தரவாதத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;

''தமிழக அரசியல் வரலாற்றில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மிகப் பெரிய ஆதரவைப் பெற்ற மக்கள் இயக்கமாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்து தேர்தலில் வெற்றியும் பெற்று இன்று தமிழக அரசியலில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த இயக்கத்தின் மீது மாணவர்களும் இளைஞர்களும் மிகுந்த நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு மாணவரின் உயர்கல்விக்கும் முழுமையான உத்தரவாதம் அளிக்கும் வகையில், தேர்தல் வாக்குறுதி பொருள் 4 வரிசை எண் 4-ல் உள்ள இளைஞர் நலன் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குறித்த திட்டத்தை நிறைவேற்றி இளங்கலை முதல் பிஎச்.டி. வரை ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடனுக்கு அரசு உத்தரவாதம் வழங்கப்படும் என்று முக்கியமான வாக்குறுதியை அளித்துள்ளது.

இந்த அறிவிப்பு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மருத்துவம், பொறியியல், சட்டம், மேலாண்மை, கலை மற்றும் அறிவியல், ஆராய்ச்சி உள்ளிட்ட எந்த உயர்கல்விப் படிப்பாக இருந்தாலும், நிதி பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்விக் கடனுக்காக வங்கி கடுமையான நிபந்தனைகள் விதிப்பது, பிணையம் கோருவது போன்ற காரணங்களால் பல திறமையான மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாமல் உள்ளனர்.

இந்நிலையில், அரசு உத்தரவாதத்துடன் ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடன் கிடைப்பது மாணவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேரத் தயாராக உள்ளனர்.

பெற்றோர்கள் கல்விக் கட்டணம், விடுதி செலவு, புத்தகங்கள் மற்றும் பிற செலவுகளை சமாளிக்க சிரமப்படுகின்றனர். இந்நேரத்தில், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடனுக்கான அரசு உத்தரவாதம் நடைமுறைப்படுத்தப்பட்டால், எந்த மாணவரும் பணத்தட்டுப்பாடு காரணமாக உயர்கல்வியை இழக்க வேண்டிய நிலை ஏற்படாது.

இளைஞர்களும் மாணவர்களும் பெரும் நம்பிக்கையுடன் ஆதரித்து வரும் தமிழக வெற்றிக் கழகம், தனது தேர்தல் வாக்குறுதியை விரைவாக நடைமுறைப்படுத்தி, மாணவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்க வேண்டும்.

இது கல்விக்கான ஆதரவாக மட்டுமல்லாமல், தமிழகத்தின் எதிர்கால தலைமுறைக்கான வலுவான முதலீடாகவும் அமையும். எனவே, மாணவர்களின் நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி இளங்கலை முதல் பிஎச்.டி. வரை ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்விக் கடனுக்கான அரசு உத்தரவாதத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.