நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், விஜய் தலைமையிலான தவெக கட்சி முதல் முறையாக போட்டியிட்டு 108 இடங்களின் வெற்றிப் பெற்று தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்க பெருபான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளில் பேச்சுவார்த்தை நடத்தி, அக்கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை காட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுப் தவெகவின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.
விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்கு கடந்த சில நாட்களாக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இயக்குநர் ஷங்கர் தன்னுடைய வாழ்த்துகளை இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது; "இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது. ஒரு மாஸ் தொடக்கத்தோடு உங்கள் பயணம் ஆரம்பித்திருக்கிறது. இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் பிரதர்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.